Hills Station

Hills Station

Wednesday, 22 December 2010

ராடியா வீட்டிற்கு சென்று சி.பி.ஐ., 3 மணி நேரம் துருவித்துருவி கேள்வி

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக அரசியல் தரகர் நிரா ராடியாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வழக்கமாக சி.பி.ஐ., தலைமையகத்தில் தான் விசாரணை நடைபெறும். இந்த நடைமுறையை மாற்றி, டில்லியிலுள்ள நிரா ராடியாவின் பண்ணை வீட்டிற்கு சென்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் 12 பேர் அடங்கிய குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம், டில்லியில் ஏழு இடங்கள், தமிழகத்தில் 27 இடங்கள் என நாடு முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கியமாக கருதப்படும் அரசியல் தரகர் நிரா ராடியாவிற்கு சொந்தமான பண்ணை இல்லத்தில், சோதனை நடத்தப்பட்டது.அதே சமயத்தில், கனாட் பிளேஸ் அருகே உள்ள பாரக்கம்பா ரோட்டில் உள்ள அவரது வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலுவலகத்திலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனைகளை துவங்கினர்.
ஐந்து மணி நேரம் சோதனை நடத்திய பிறகு, அப்போதே ராடியாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை செய்தனர்.சோதனைக்கு பின், சம்பந்தப்பட்ட நபர்களை டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமையகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் உட்பட தொலைத் தொடர்பு அதிகாரிகள், முன்னாள் செயலர் ஆகியோர் அடங்குவர்.

இந்த வரிசையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அரசியல் தரகர் நிரா ராடியா, முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வரிசையில், அரசியல் தரகர் நிரா ராடியாவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட இருந்தது. நேற்று காலை டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் இருந்து சில பெண் அதிகாரிகள் உட்பட முக்கிய அதிகாரிகள் காரில் புறப்பட்டனர். தெற்கு டில்லி சத்தர்பூரில் உள்ள நிரா ராடியாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்றனர். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்து கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர்.

குறிப்பாக, சோதனையின் போது கிடைத்தவற்றை கொண்டு அது தொடர்பாக கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது. மூன்று மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த அதிகாரிகள், விரிவான தகவல்கøளை வெளியிட மறுத்தனர். ஆனால், அவர் பல பிரமுகர்களுடன் பேசிய பேச்சுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

நடைமுறை மாறியது: விசாரணைக்கு அழைக்கப்படுபவர் பொதுவாக சி.பி.ஐ., அலுவலகத்தில் வைத்துதான் விசாரிக்கப்படுவார். நேற்று நடைமுறையை மாற்றியது ஏன் என்று ஒரு அதிகாரியிடம் கேட்ட போது, "இது விசாரணை நடத்தும் அதிகாரியின் தனிப்பட்ட உரிமை. இதற்கு முன்பு இது போல், சம்பந்தப்பட்டவர்களின் இடத்திற்கே சென்று நடத்தியுள்ளனர். இதில் நிரா ராடியா பெண்ணாக இருப்பதால், அவரது வீட்டிலேயே சந்தித்து விசாரணை நடத்தும்போது, எளிதாக அவரிடம் தகவல்களை பெறமுடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது' என்றார்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணையை அதிரடியாக துவக்கிய சி.பி.ஐ., அதிகாரிகள், நிரா ராடியா விவகாரத்தில், நடைமுறையை மாற்றியது பலரது புருவத்தை உயர்த்தியிருக்கிறது. தவிரவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., இயங்குவதால், ராடியாவிடம் நடத்திய விசாரணைக்கு அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் விசாரிக்கப்படலாம்.

Thanks to தினமலர்

No comments:

Post a Comment